பிரசார கூட்டத்திற்கு விளையாட்டு துப்பாக்கியுடன் வந்த இளைஞர்கள் கைது
கூட்ட அரங்கில் தம் பெற்றோர்கள் இருந்ததால் தாம் வீடு திரும்புவதாக தெரிவிக்கவே கூட்ட அரங்கிற்கு வந்ததாக மாணவர்கள் தங்களிடம் தெரிவித்தனர் என வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் ஒன்றிற்கு விளையாட்டு துப்பாக்கியுடன் வந்த இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி தலைமையில், வெலிமடை நகரிலுள்ள இந்திராணி திரையரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வைத்தே மேற்படி இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தின் பாதுகாப்பிற்காக சுற்றுவட்டார பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், உவபரணகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சந்திப்பு மண்டபத்திற்குள் நுழைய முற்பட்ட போது, அம்பகஸ்தோவ பொலிஸார் மற்றும் பண்டாரவளை விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் சோதனையிட்டனர்.
இளைஞர்களிடம் பிளாஸ்டிக்கினால் ஆன விளையாட்டுத் கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு, வெலிமடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அம்பகஸ்தோவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.ரத்நாயக்க தெரிவித்தார்.
கூட்ட அரங்கில் தம் பெற்றோர்கள் இருந்ததால் தாம் வீடு திரும்புவதாக தெரிவிக்கவே கூட்ட அரங்கிற்கு வந்ததாக மாணவர்கள் தங்களிடம் தெரிவித்தனர் என வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.