ரஷிய ஜனாதிபதி புடினுடன் இந்திய பிரதமர் மோடி இன்று பேச்சு
இந்திய பிரதமர் மோடி, ரஷியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். நேற்று அவர் ரஷியாவுக்கு புறப்பட்டு சென்றார்.

இந்திய பிரதமர் மோடி, ரஷியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். நேற்று அவர் ரஷியாவுக்கு புறப்பட்டு சென்றார்.
மாஸ்கோ விமான நிலையத்தில் அவரை ரஷியாவின் முதன்மை துணை பிரதமர் டெனிஸ் மன்டுரோவ் வரவேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்தியா-ரஷியா இடையிலான 22-வது வருடாந்திர உச்சி மாநாடு, இன்று (செவ்வாய்க்கிழமை) மாஸ்கோவில் நடக்கிறது. அதில் பங்கேற்பதற்காகவே பிரதமர் மோடி சென்றுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அவர் அங்கு சென்றுள்ளார். ரஷியா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு அவர் செல்வதும் இதுவே முதல்முறை ஆகும். பிரதமர் மோடிக்கு நேற்று இரவு, ரஷிய அதிபர் புதின் விருந்து அளித்தார்.
இதைத்தொடர்ந்து, இன்றைய உச்சி மாநாட்டில், பிரதமர் மோடியும், புடினும் சந்திக்கிறார்கள். முதலில், இருவரும் தனியாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். பிறகு, பிரதிநிதிகள் குழுக்களுடன் இணைந்து பேசுவார்கள்.
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி அவர்கள் விவாதிக்கிறார்கள். பரஸ்பர நலன்சார்ந்த பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்.
ராணுவம், வர்த்தகம், முதலீட்டு உறவு, எரிசக்தி ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம், மக்களிடையிலான உறவு ஆகியவற்றில் இருதரப்பு உறவு குறித்து இருவரும் பேசுகிறார்கள்.
ரஷியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் பிரதமர் மோடி இன்று சந்திக்கிறார். அதிபரின் கிரெம்ளின் மாளிகையில், போர் வீரர் கல்லறையில் மலர் அஞ்சலி செலுத்துகிறார்.
ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று ரஷியாவில் இருந்து ஆஸ்திரியாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் வான்டர் பெல்லனை சந்திக்கிறார்.