நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு புதிதாக 10 சதவீத வரியை விதித்தார் டிரம்ப்!

இந்தத் தீர்ப்பை "மோசமானது" என்று குறிப்பிட்ட டிரம்ப், தனது வர்த்தகக் கொள்கையை நிராகரித்த நீதிபதிகளை "முட்டாள்கள்" என்றும் "தேசப்பக்தி இல்லாதவர்கள்" என்றும் விமர்சித்தார்.

பெப்ரவரி 21, 2026 - 18:09
நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு புதிதாக 10 சதவீத வரியை விதித்தார் டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதற்கு முன்பு விதித்த வரிகளை இரத்து செய்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அவர் புதிதாக 10 சதவீத  உலகளாவிய இறக்குமதி வரியை அறிமுகப்படுத்தியுள்ளார். 

6-3 என்ற கணக்கில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பில், ஜனாதிபதி டிரம்ப் தனது அதிகார வரம்புகளை மீறிவிட்டதாக நீதிமன்றம் தீர்மானித்தது. 

இந்தத் தீர்ப்பை "மோசமானது" என்று குறிப்பிட்ட டிரம்ப், தனது வர்த்தகக் கொள்கையை நிராகரித்த நீதிபதிகளை "முட்டாள்கள்" என்றும் "தேசப்பக்தி இல்லாதவர்கள்" என்றும் விமர்சித்தார்.

நீதிமன்றம் முந்தைய வரிகளை இரத்து செய்த பிறகு, இதுவரை பயன்படுத்தப்படாத 'செக்சன் 122' (Section 122) என்ற சட்டத்தைப் பயன்படுத்தி, டிரம்ப் இந்த புதிய 10 சதவீத  வரியை விதித்துள்ளார்.

இந்தச் சட்டத்தின் கீழ் 150 நாட்கள் வரை 15 சதவீத  வரிகள் விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.

புதிய உத்தரவு, பிப்ரவரி 24-ஆம் திகதி முதல் அமலுக்கு வர உள்ளது.

சில குறிப்பிட்ட கனிமங்கள், இயற்கை வளங்கள், உரங்கள், சில வேளாண் பொருட்கள் (ஆரஞ்சு, மாட்டிறைச்சி), மருந்துகள் மற்றும் சில வாகனங்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் வைத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகள், முன்னதாகப் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக, தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய 10 சதவீத வரியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இருப்பினும், வட அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், கனடாவும் மெக்சிகோவும் பெரும்பாலான பொருட்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு பெறும்.

நீதிமன்றத் தீர்ப்பை அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்றுள்ளதோடு, இது தங்களுக்கு ஒரு பெரிய "நிவாரணம்" என்று சிறு வணிகர்கள் தெரிவித்துள்ளனர். 
இதன்மூலம் பில்லியன்கணக்கான டாலர் வரிகளைத் திரும்பச் செலுத்த வேண்டிய சூழல் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. 

ஆனால், சட்டப்போராட்டம் இல்லாமல் வரிகள் திருப்பித் தரப்பட மாட்டாது என்றும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் நீடிக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். 

வரிகள் திரும்பப் பெறப்படுவதற்கான நடைமுறை எவ்வாறு அமையும் என்பது குறித்து சர்வதேச வர்த்தகத்துக்கான நீதிமன்றம் முடிவு செய்யும்.

இந்த வரி விதிப்பு நடவடிக்கை உலகளாவிய வர்த்தகத்தில் ஒரு புதிய நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!