இலங்கையிலும் புதிய கொரோனா வைரஸ் திரிபு? வெளியான தகவல்!
புதிய கொரோனா வைரஸ் திரிபான ஜே.என்-1 ஒமிக்ரோன் பரவல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.

புதிய கொரோனா வைரஸ் திரிபான ஜே.என்-1 ஒமிக்ரோன் பரவல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.
இந்த வைரஸ் ஏற்கெனவே இலங்கை சமூகத்திற்குள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட தலைவரான சந்திம ஜீவந்திர, தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா பரிசோதனைகள் தற்போது குறைந்தளவிலேயே முன்னெடுக்கப்படுவதால், அதன் உண்மையான தரவுகளை பெற முடியாதுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படுகின்ற நிலையில், அதிக பாதிப்பினை எதிர்கொள்ளும் தரப்பினர் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுவது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சலும் பரவும் நிலையில், தொடர்ச்சியான காய்ச்சல் காணப்படுமானால், அது தொடர்பில், பொதுமக்கள் உரிய மருத்துவரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, காய்ச்சல், இருமல், வாசனை இழப்பு மற்றும் சுவை இழப்பு, தொடர்ந்து அதிக காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, சாப்பிட இயலாமை மற்றும் வாந்தியெடுக்கும் போக்கு ஆகியவை ஜே.என்.1 இன் அறிகுறிகளாக சர்வதேச ரீதியில் இனங்காணப்பட்டுள்ளதாக டாக்டர் ஜீவந்தரா குறிப்பிட்டுள்ளார்.