நீண்ட தூர போக்குவரத்து பஸ்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படும்! வெளியான அறிவிப்பு
பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பொருத்தமான இடங்களில் இரவு நேரங்களில் அதிகாரிகள் குழுக்களை நியமித்து, வீதியில் செல்லும் வாகனங்கள் மற்றும் பஸ்களை விசேட சோதனைக்கு உட்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீண்ட தூர போக்குவரத்து பஸ்களை திடீர் சோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தூர சேவை பயணிகள் பஸ்கள் விபத்துக்குள்ளாவது தினமும் அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு விசேட சோதனை மேற்கொள்ளப்படவுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துதல், போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்துதல், கவனயீனமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் செலுத்துதல் ஆகிய போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்துமாறு, பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பொருத்தமான இடங்களில் இரவு நேரங்களில் அதிகாரிகள் குழுக்களை நியமித்து, வீதியில் செல்லும் வாகனங்கள் மற்றும் பஸ்களை விசேட சோதனைக்கு உட்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொலிஸ் மோட்டார் சைக்கிள் ரோந்து பிரிவு அதிகாரிகள் மூலம் வீதியில் கவனயீனமாகப் பயணிக்கும் பஸ்களை சோதனைக்கு உட்படுத்தி
சட்டத்தை அமல்படுத்தவும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.