மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை எடுத்துள்ள தீர்மானம்
மின் கட்டண அதிகரிப்பு: மின்சார கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் கோரிக்கை தொடர்பான தரவுகள் மற்றும் காரணங்களை இன்று (02) அல்லது நாளை (03) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

மின் கட்டண அதிகரிப்பு: மின்சார கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் கோரிக்கை தொடர்பான தரவுகள் மற்றும் காரணங்களை இன்று (02) அல்லது நாளை (03) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
நாடு முழுவதும் அண்மைக்காலமாக நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக அனல் மின்சாரத்தைப் பெறுவதற்கு செலவிடப்படும் உற்பத்திச் செலவை ஈடுசெய்யும் வகையில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்குமாறு இலங்கை மின்சார சபை அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தது.
இதன்படி, கட்டண திருத்த முறைக்கு முன்னர், விலையை அதிகரிப்பதற்கான கோரிக்கை என்பதால், இது தொடர்பான விரிவான தகவல்கள் எதிர்வரும் இரண்டு நாட்களில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என மின்சார சபை பேச்சாளர் தெரிவித்தார்.
மின் கட்டண திருத்தத்தை இம்மாதம் மேற்கொள்ள அனுமதிக்குமாறு இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும், மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு அனுமதி வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு உரிமை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மின்சார சபையை மறுசீரமைத்து, மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாமல் இலாபகரமான நிலைக்கு கொண்டு வர வேண்டும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியுள்ளார்.
இதேவேளை, மீண்டும் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்பட்டால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவது தவிர்க்க முடியாதது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.