மனித புதைகுழிக்கு நீதி கோரிய பேரணிக்கு அழைப்பு
வெள்ளிக்கிழமை, வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை நோக்கிப் பேரணி மேற்கொள்ளப்படவுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி, வடக்கு மற்றும் கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை மேற்கொள்ள வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அம்பாறை - கல்முனை பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்று திங்கட்கிழமை (24) மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இப்போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை, வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை நோக்கிப் பேரணி மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த பேரணிக்கு அனைத்துத் தரப்பினரும் அரசியல் கட்சிகளும் எவ்வித பேதமுமின்றி ஆதரவளிக்கவேண்டும் என்பதுடன், அன்றையதினம் விடுமுறை என்பதால் வர்த்தகர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிப்பதுடன், முல்லைத்தீவில் நடைபெறவுள்ள போராட்டத்திலும் பங்கேற்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.
குறித்த செய்தியாளர் சந்திப்பில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணியும், திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி செபஸ்த்தியான் தேவியும் கலந்துகொண்டிருந்தார்.
(பாறுக் ஷிஹான்)