அடுத்த பொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு இணக்கம் - புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து?
அரசியலமைப்பின் படி பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது.

Colombo, Nov 29 (News21) - அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவு செய்யப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் கலந்துரையாடியுள்ளதாக அறிய முடிகின்றது.
அரசியலமைப்பின் படி பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது. இந்த பதவியில் நீண்ட காலம் பணியாற்றிய சி.டி. விக்கிரமரத்ன அண்மையில் ஓய்வுபெற்றார்.
இதையும் படிங்க: நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
அடுத்த பொலிஸ் மா அதிபராக முன்மொழியப்பட்ட பெயர் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே பொலிஸ் மா அதிபர் நியமனம் தாமதமானதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், விரைவில் புதிய பொலிஸ் மா அதிபர் பதவி நியமனம் வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி பொலிஸ் மா அதிபர் நியமனத்தை வழங்கியவுடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான அரசியலமைப்பு சபையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.
இதையும் படிங்க: வடகொரியாவில் தலைவிரித்தாடும் புதிய பிரச்சினை: சோகத்தில் மக்கள்!
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் இதன் உறுப்பினர்களாக உள்ளனர். அத்துடன், சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட பத்து உறுப்பினர்களைக் கொண்டதாக அரசியலமைப்பு சபை காணப்படுகின்றது.
இந்த நிலையில், உத்தேச நியமனத்துக்கு ஜனாதிபதியும் அமைச்சரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.