சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 20 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான நிறுவனம் தலையிட்டு அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.

மியன்மாரில் உள்ள முகாம்களில் இணைய குற்றங்களுக்கு பலவந்தமாக பயன்படுத்தப்பட்ட 20 இலங்கையர்கள் நேற்று (05) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இக்குழுவில் 16 ஆண்களும் 04 இளம் பெண்களும் உள்ளனர்.
சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான நிறுவனம் தலையிட்டு அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.
இவர்கள் மியான்மரில் இருந்து தாய்லாந்துக்கு அழைத்து வரப்பட்டு நேற்று (05) இரவு 11.09 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து தாய் எயார்வேஸின் TG-307 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
குடிவரவு குடியகழ்வு திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸ் ஆட்கடத்தல், மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வாக்குமூலம் மற்றும் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவர்களை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.