நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை! மணித்தியாலத்திற்கு 30–40 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

கொழும்பு முதல் புத்தளம் மற்றும் காங்கசந்துறை வழியாக திருகோணமலை வரையிலும், மேலும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணித்தியாலத்திற்கு 50–55 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

டிசம்பர் 14, 2025 - 08:38
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை! மணித்தியாலத்திற்கு 30–40 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது. அதே நேரத்தில், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.

மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும். அதேபோல், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசும் நிலை காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கொழும்பு முதல் புத்தளம் மற்றும் காங்கசந்துறை வழியாக திருகோணமலை வரையிலும், மேலும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணித்தியாலத்திற்கு 50–55 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக கடல் பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படலாம்.

இதனிடையே, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள், அதேபோல் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!