யாழில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பு!
ஒவ்வொரு நாளும் போதைப்பொருள் பாவனையால் குறைந்தது மூவராவது யாழில் கைது செய்யப்படுகின்றனர் என்றும் யாழ். பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக துறைசார் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இது தொடர்பில் அவர்கள் குறிப்பிடுவதாவது, “யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக அளவுக்கு அதிகமான போதைப்பொருள் பாவனையால் சிலர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்குள் மட்டும் நால்வர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
“அதீத போதைப்பொருளால் ஏற்படும் மரணங்கள் நீண்டகாலமாக இல்லாமலிருந்த நிலையில், அண்மைக்காலமாக மீண்டும் போதைப்பொருளால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளமை வேதனையான விடயமாகும்”.
இதேவேளை, ஒவ்வொரு நாளும் போதைப்பொருள் பாவனையால் குறைந்தது மூவராவது யாழில் கைது செய்யப்படுகின்றனர் என்றும் அவர்களில் பலர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் யாழ். பொலிஸார் தெரிவிக்கின்றனர்.