அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 10 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் செசாபீக் என்ற நகரத்தில் உள்ள வால்மார்ட் சூப்பர் ஸ்டோரில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர் எனவும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ஒரு கடை மேலாளர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும் அவர் அதே கடையில் பணியாற்றினாரா என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை.
பிறரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பிறகு தன்னைத்தானே சுட்டு அவரும் இறந்துவிட்டார் என்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் நோக்கம் என்ன என்பதும் இதுவரை தெரியவில்லை என்றும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செசாபீக் நகர நிர்வாகம் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், “வால்மார்ட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டன” என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரம் அதில் கூறப்படவில்லை.
இதேவேளை, சில நாட்களுக்கு முன்னர்தான் அமெரிக்க மாகாணமான கொலோராடோவில் உள்ள ஒரு தன்பால் ஈர்ப்பாளர்கள் மன்றத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர்.
2019ஆம் ஆண்டு டெக்சாஸ் மாகாணம் எல் பாசோ நகரில் உள்ள ஒரு வால்மார்ட் அங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
