ஓமன் எண்ணெய் கப்பல் விபத்து - இலங்கையர் உட்பட 9 பேர் மீட்பு
ஓமன் நாட்டின் ராஸ் மத்ரகா என்ற இடத்தில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல்கள் தொலைவில் எண்ணெய் கப்பல் ஒன்று கடந்த திங்கட்கிழமை திடீரென கவிழ்ந்தது.
இந்த கப்பலில் 13 இந்தியர்களும் இலங்கையை சேர்ந்த மூவரும் பயணித்ததாக ஓமனின் கடல்வழி பாதுகாப்பு மையம் தெரிவிக்கின்றது.
கப்பல் ஏமன் நாட்டின் துறைமுக நகரான ஏடன் நோக்கி சென்று கொண்டு இருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரெஸ்டீஜ் பால்கன் என்ற பெயரிடப்பட்ட கோமரோஸ் நாட்டின் கொடியுடன் கூடிய அந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில், காணாமல் போனவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்திய கடற்படையை சேர்ந்த போர்க்கப்பல் ஐ.என்.எஸ். தேக் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளது.
இந்த மீட்பு பணியில் இதுவரை 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் மீட்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களை தேடும் பணி இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
