வாக்குச்சாவடிகளுக்கு அலைபேசிகளை எடுத்துச் செல்ல தடை!
வாக்களித்ததன் பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொன்னால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வாக்குச்சாவடிகளுக்கு வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் அலைபேசிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
வாக்களிப்பு நிலையங்களுக்கு மட்டுமன்றி, வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அலைபேசிகளை எடுத்துச் செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், வாக்களித்ததன் பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொன்னால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புக்கு இன்னும் 08 நாட்களே உள்ள நிலையில், வாக்களிப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
‘சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான ஜனாதிபதி தேர்தலில் ஊடகங்களின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில், இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தால் ஏற்பாடு செய்திருந்த விசேட கருத்தரங்கு, கொழும்பிலுள்ள இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில், நேற்று வியாழக்கிழமை (12) நடைபெற்றது.
அதில், கலந்துகொண்டு கருத்துரையை வழங்கியதன் பின்னர், கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து பதிலளித்து கருத்துரைக்கையில், தபால் மூலம் வாக்களித்ததை அலைபேசியில் படமாக எடுத்து, பொதுவெளியில் பகிர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையங்களுக்குள் படங்களை எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களை படம் பிடிக்க அனுமதி பெற்ற ஊடகவியலாளர்கள் படம் பிடிக்கலாம். எனினும், அதனை, 21ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு பின்னரே பயன்படுத்த வேண்டும்.
மௌன காலத்தில் ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும்
தேர்தல் பிரசார நடவடிக்கைகள், 18ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும். அதற்கு பின்னர் 48 மணி நேரம் மௌன காலம், அக்கால பகுதிக்குள் எவ்விதமான பிரசார நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது. ஊடகங்களும், தேர்தல்கள் ஆய்வு நிகழ்ச்சிகளை முன்னெடுக்க முடியாது.
தபால்மூல வாக்குப்பதிவில், தங்களுடைய வேட்பாளர்தான் முன்னிலையில் இருக்கின்றனர் என்ற செய்தி பரப்பப்பட்டுள்ளது. அது தவறானது. அவ்வாறான சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில வலைத்தளங்களில் வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதால், கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது. எனினும், பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து போலி செய்திகளை தடுத்துள்ளோம்.
வாக்கெண்ணும் நடவடிக்கை
ஒவ்வொரு வாக்கெண்ணும் நிலையங்களுக்கு ஒரு வேட்பாளருக்கு ஐவர் என்ற அடிப்படையில், 38 வேட்பாளர்களுக்கும் 190 பேரும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் 40 பேரும் பிரசன்னமாய் இருப்பார்கள்.
சாதாரண அறையொன்றில் வாக்கு எண்ணும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். மேலே குறிப்பிட்ட அத்தனை பேரும், ஒருவர், மற்றொருவரின் தலைக்கு மேலே எட்டிப் பார்க்க வேண்டும். இவ்வாறு எட்டிப்பார்க்கும் ஒரு வேட்பாளரின் பிரதிநிதி அந்த அறையிலிருந்து வெளியே வந்து தான் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையை கூறலாம்.
அந்த எண்ணிக்கையில் இலக்கங்கள் மாறுபடலாம். ஆகையால், உத்தியோகபூர்வமாக பெறுபேறுகள் வெளியிடுவதற்கு முன்னரான உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகளை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளவும். கருத்துக்கணிப்புகளை வெளியிட வேண்டாம்.
விளம்பரம் தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும். அத்துடன் போலி செய்திகளையும், மக்களிடையே குரோதங்களை ஏற்படுத்தும் செய்திகளையும் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளவும்.
வாக்கெண்ணும் போது 50 சதவீதமான வாக்குகளை பெற்றவர், ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார். அதற்குப் பின்னர் வாக்குகள் எண்ணப்படாது. எனினும், 50க்கு குறைவான வாக்குகள் பெறப்படுமிடத்து, மூன்றாவது விருப்பு வாக்கு எண்ணப்படும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால், பெறுபேறுகளை வெளியிடுவது தாமதமாகும்.
இரண்டு வாக்குகள் போட்டால் கைது
நபரொருவர் இரண்டு வாக்குகளை போட்டால் கைது செய்யப்படுவார். தபால் வாக்குப்பதிவை செய்திருந்த ஒருவருக்கு, வாக்காளர் அட்டை கிடைத்திருந்தால், அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டு வரவும். அவர், இரண்டு வாக்குகளை அளித்தால் குற்றமாகும். எனினும், அவ்வாறு நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகும்.
பெயர்களில் தவறுகள் இருப்பின்
வாக்காளர்கள் அட்டையில் பெயர்களில் தவறுகள் இடம் பெற்றிருப்பின், அதுதொடர்பில், கிராம சேவகர் அல்லது தேர்தல்கள் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரவும். வாக்களிக்க செல்லும் போது, வாக்காளர் அட்டை தேவைப்படாது. எனினும், வாக்களிப்பை இலகுபடுத்தவே வாக்காளர் அட்டை விநியோகிக்கப்பட்ட உள்ளது.