சுகீஷ்வர பண்டார ஜூலை 8 வரை விளக்கமறியலில்; பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர பண்டார, இன்று (ஜூலை 1) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை 8 ஆம் தேதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களை பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் சுகீஷ்வர பண்டார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனு தொடர்பான உத்தரவு, ஜூலை 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுவரை அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்படுவார்.
இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, விசாரணையை முன்னெடுத்து வரும் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.