“என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்” – நீதிமன்றத்தில் ஆஜரான பிள்ளையான் கருத்து
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), எதிர்வரும் ஜூலை 13ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டபோது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த பிள்ளையான், தனது மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்தார்.
“என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. போலியான குற்றச்சாட்டுகள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய். இது உங்களுக்கு சந்தோஷமான விடயம்தானே?” என்று அவர் தெரிவித்தார்.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான், நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணையின்போது, ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளும், கல்லடி பகுதியில் உள்ள காணி விவகாரம் தொடர்பான வழக்கும் பரிசீலிக்கப்பட்டன. நீதிபதி அ. தர்சினி முன்னிலையில் விசாரணை நடைபெற்றதுடன், சாட்சிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
பிள்ளையான் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், அவரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்க அனுமதிக்குமாறும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள வழக்கை சாதாரண குற்றவியல் வழக்காக மாற்றுமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும், வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 13ஆம் தேதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
மேலும், கல்லடி காணி விவகாரம் தொடர்பான வழக்கு ஒக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணையின்படி, 2008ஆம் ஆண்டு டி-56 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில், கல்லடி முருகன் கோவில் அருகே முன்னாள் காவல்துறை அதிகாரி உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் உயிரிழந்த சம்பவம் மற்றும் வவுணதீவு கொத்தியாபுல பகுதியில் இடம்பெற்ற மற்றொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஆகியவை அடங்குகின்றன.
இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.