வட,கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்திய துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு
இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் புதுடில்லியின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை. மாகாண சபைகளுக்கான தேர்தல் தாமதப்படுத்தப்படும் நிலையில் தேர்தலை விரைந்து நடத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமாரவுடனான சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது. அச்சமயத்தில் தேர்தலை விரைந்து நடத்துவதற்கான சாதகமான சமிக்ஞையை அவர் வெளிப்படுத்தினார் என்று இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடத்தில் தெரிவித்தார்.
இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும், வடக்கு,கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்திரா விடுதியில் 19-04-2026 அன்று நடைபெற்றிருந்தது.
இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் புளொட் அமைப்பின் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும், தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் பங்கேற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பில் பங்கேற்ற தலைவர்கள் சந்திப்பு தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழரசுக்கட்சியானது இந்த நாட்டில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யப்பட வேண்டுமாக இருந்தால் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றே அமுலாக்கப்பட வேண்டும் என்பதை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டது. அந்த நிலைப்பாட்டிலேயே கட்சி இன்னமும் உள்ளது. அதற்காக தமிழ் மக்கள் அதிகமான ஆணையை எமது கட்சிக்கே வழங்கி வருகின்றார்கள்.
இதேநேரம், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கைப் பாராளுமன்றத்தில் 2015இல் ஆற்றிய உரையின்போது, இலங்கைத் தீவின் அமைதிக்கு கூட்டுறவு சமஷ்டி முறைமை பொருத்தமானது என்று கோடிட்டு காண்பித்திருந்தார். ஆகவே அந்த முறைமையை அமுலாக்குவதற்கான இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம் என்று எடுத்துரைத்தேன் என்றார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ச்சியாக தாமதிக்கப்பட்டு வருகின்றமையை துணை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தேன். குறிப்பாக, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்காக சட்ட சிக்கல்களை போக்குவதற்கு ஏலவே என்னால் தனிநபர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அதே பிரேரணையை எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீண்டும் சமர்ப்பித்துள்ளார். ஆனால் அரசாங்கம் விசேட பாராளுமன்றக் குழுவை நியமித்தும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை மீளமைப்பது என்ற போர்வையிலும் காலங்கடத்தி வருவதை பார்க்க கூடியதாக உள்ளது என்று சுட்டிக்காட்டினேன். அச்சமயத்தில் ஜனாதிபதி அநுரகுமாரவுடனான சந்திப்பின்போது குறித்த விடயம் சம்பந்தமாக தான் கவனம் செலுத்தியதாகவும் அச்சமயத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைந்து நடத்துவதற்கான சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார் என்றார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கையில், போரின் பின்னரான சூழலில் வட மாகாணத்தில் மக்கள் மீள்குடியேற்றத்துக்கான சிரமப்பட்டுக்கொண்டிருந்த தருணத்தில் பாரதப்பிரமருடனான சந்திப்பின்போது வீட்டுத்திட்டக்கோரிக்கையை முன்வைத்திருந்தோம். அச்சமயத்தில் எமது கோரிக்கையை ஏற்று இந்தியா 50ஆயிரம் வீட்டுத்திட்டங்களை வழங்கியது. அந்த வீட்டுத்திட்டங்கள் எமது மக்களுக்கு நன்மைகளை அளித்துள்ளதோடு இன்னமும் இந்திய வீட்டுத்திட்டம் என்ற பெயர் பேசுபொருளாகவே உள்ளது. அதேபோன்று இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும் மக்களுக்கு நிரந்தரமான வாழ்வாதார உதவிகளையும் இந்தியா வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அத்துடன் வட,கிழக்கில் மக்களின் தொகை வீழ்ச்சி அடைந்து வருகையில் இந்தியாவில் உள்ள மக்களை மீளவும் அவர்களது சொந்தப்பிரதேசங்களில் குடியேற்றுவது அவசியமாகின்றது.
அத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவின் வகிபாகம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக 13ஆம் திருத்தச்சட்டத்தின் கீழ் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பறித்து வருகின்றது. அண்மையில் கூட மகாhண சபைகளின் கீழுள்ள பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரையில் 32வழக்கு தீர்ப்புக்கள் மாகாண சபையின் அதிகாரங்களை மத்திக்கு கொண்டு செல்வதையே மையப்படுத்தியதாக வெளியாகியுள்ளது. இது கவலையளிக்கின்ற விடயமாகும். ஆகவே சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை இந்தியா பெறுவதற்கு காத்திரமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு நாம் கோருகின்றோம். அதில் தான் தமிழ் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது என்று கூறினேன் என்றார்.
புளொட் தலைவர் சித்தார்த்தன் தெரிவிக்கையில், இந்திய துணை ஜனாதிபதி எமது பிரச்சினைகள் தொடர்பிலான அனைத்து விடயங்களையும் மிகவும் தெளிவாக புரிந்து வைத்துள்ளார். அவருடனான சந்திப்பு சுமூகமாக அமைந்திருந்தது. மேலும், இந்தியாவிலிருந்து நாடு திரும்புகின்ற மக்களுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி அவர்களின் மறுவாழ்வுக்கு உதவ வேண்டும். மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ச்சியாக தாமதித்து வருகின்றது. குறிப்பாக அரசாங்கம் இந்த விடயத்தில் ஆர்வமற்ற நிலைப்பாட்டில் இருக்கின்றமையானது வெளிப்படுகின்றது. அத்துடன் மாறுபட்ட கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றது. இந்த விடயத்தில் இந்தியா காத்திரமான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்துக்கு அண்மையில் கூட தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டத்தில் கணிசமான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது. ஆகவே அரசாங்கம் தார்மீக அடிப்படையில் மாகாண சபை விடயத்தில் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி பணிகளுக்கு இந்தியாவின் உதவி வரவேற்கத்தக்கது என்பதோடு பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு விடயத்திலும் விரைந்த நடவடிக்கை அவசியமாகின்றது என்பதை குறிப்பிட்டேன் என்றார்.
ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சத்தங்கள் ஓய்ந்து விட்டாலும் இன்னமும் போர்காலத்துக்குள் தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தற்போதைய அரசாங்கமும் எதிர்பார்த்த செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. ஆகவே அவர்களின் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் இழக்கப்படுகின்றது. மக்களின் காணி அபகரிப்புக்களும், திட்டமிட்ட குடியேற்றச் செயற்பாடுகளும் நீளுகின்றன.
இதேநேரம், இந்தியாவில் இருந்து இலங்கை திரும்புகின்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் உரிய கவனம் செலுத்துவதில்லை. அவர்களுக்கான அங்கீகாரம் மறுக்கப்படுகின்றது. இதுதொடர்பில் உரிய கவனம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். அதேபோன்று இலங்கை, இந்திய மீனவர்கள் விடயத்தில் இருதரப்பினரையும் ஆழ்கடல் மீன்பிடிக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதன் ஊடாக கணிசமான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பது எனது யோசனையாக உள்ளது என்று கூறினேன் என்றார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவிக்கையில், எமது நிலைப்பாட்டை நாம் எழுத்துமூலமான மகஜரை கைளித்து வெளிப்படுத்தியுள்ளோம். ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்கும் செயற்பாட்டுக்கு இந்தியா துணைபோகக் கூடாது என்பதையும் 13ஆவது திருத்தச்சட்டத்தினை வலுவிழக்கச் செய்யும் நீதிமன்றச் தீர்ப்புக்களையும் குறிப்பிட்டுள்ளோம். அதுமட்டுமன்றி, அண்மைய நாட்களில் வடக்கு,கிழக்கில் உள்ள இந்து ஆலயங்களை தொல்பொருளின் பெயரால் பௌத்தமயமாக்கும் செயற்பாடுகள் தொடர்வதையும் உதாரணங்களுடன் எடுத்துரைத்தேன். விசேடமாக வெடுக்குநாறி பாரம்பரிய இந்து ஆலயத்தை அமைச்சர் பௌத்த தொல்பொருள் பிரதேசமாக மாற்றுவதற்கான அறிவிப்பை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியை சுட்டிக்காட்டினேன். திரியாயவில் 32பௌத்த விகாரைகளை அமைக்கும் செயற்பாட்டையும் சுட்டிக்காட்டினேன். இந்த விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படாது விட்டால் தமிழர் தேசம் அழிக்கப்படும் என்பதையும் எடுத்துரைத்தேன் என்றார்.
தமிழ்த் தலைவர்களின் அனைத்து கருத்துக்களையும் மிகவும் உன்னிப்புடன் இந்திய துணைஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டதோடு அவை தொடர்பில் குறிப்புக்களையும் எடுத்துக்கொண்டதாகவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்ற நம்பிக்கை அளித்ததாகவும் மேற்படி தலைவர்கள் குறிப்பிட்டனர்.
