கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்கள் கடத்தல்: சகோதரர்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம்!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்களது பயணப் பொதிகளுக்குள் 64 புறாக்களை மறைத்து எடுத்து வந்த வென்னப்புவவைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு, இலங்கை சுங்க அதிகாரிகள் மொத்தம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
38 மற்றும் 42 வயதுடைய வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள், நேற்று சனிக்கிழமை (25) எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK652 என்ற விமானம் மூலம் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர்.
விமான நிலையத்தின் பசுமை வழித்தடம் (Green Channel) வழியாக வெளியேற முயன்ற இவர்களை, இரவு 7.15 மணியளவில் சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர்.
அவர்களின் 08 பெட்டிகளைச் சோதனையிட்டபோது, 12 உலோகக் கூண்டுகளில் அடைக்கப்பட்ட நிலையில் 64 புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் துரதிர்ஷ்டவசமாக 8 புறாக்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட புறாக்களின் மொத்த மதிப்பு சுமார் 34,31,400 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. விசாரணையைத் தொடர்ந்து, ஒரு சகோதரருக்கு 4 லட்சம் ரூபாயும், மற்றவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.
உயிருடன் மீட்கப்பட்ட எஞ்சிய புறாக்களை மீண்டும் இத்தாலிக்கே திருப்பி அனுப்ப சுங்கத் துறை உத்தரவிட்டுள்ளது.