சீரற்ற வானிலை : மத்திய மாகாணத்தின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அதிபர்களுக்கு அனுமதி
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை மத்திய மாகாண பிரதம செயலாளர் அறிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பையும், நிலவும் வானிலைச் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, இந்த விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்குட்பட்ட ஒவ்வொரு பாடசாலையின் நிலைமையையும் மதிப்பீடு செய்து, விடுமுறை வழங்க வேண்டுமா அல்லது வழக்கம்போல் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமா என்பதை அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் தாமாகவே தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை, பலத்த காற்று மற்றும் மண்சரிவு அபாயம் போன்ற நிலைமைகள் தொடரும் பகுதிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், பெற்றோர்களும் மாணவர்களும் தங்களது பாடசாலைகள் வெளியிடும் அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, அதற்கேற்ப செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.