ஈரானுக்குப் புதிய அழுத்தம்! மேலும் 10,000 வீரர்களை அனுப்பும் டிரம்ப்! அமைதிப் பேச்சுவார்த்தையில் அடுத்தகட்ட நகர்வு!
ஈரானுடன் ஒருபுறம் ரகசிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அதிபர் டிரம்ப் கூறி வரும் நிலையில், மற்றொருபுறம் மேற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவ பலத்தை அதிகரிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
சுமார் 10,000 கூடுதல் வீரர்களை அங்கு அனுப்புவதற்கான வரைவுத் திட்டத்தை அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். இதில் காலாட்படை (Infantry) மற்றும் கவச வாகனங்கள் (Armoured Vehicles) உள்ளடங்கும் என 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' (Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவைத் (Kharg Island) தாக்கும் தூரத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில் இவர்கள் நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளது.
இந்த 10,000 வீரர்களுக்கு முன்னதாகவே, அமெரிக்காவின் அதிவேக அதிரடிப் படையான 82-வது ஏர்போர்ன் டிவிஷனைச் (82nd Airborne Division) சேர்ந்த சுமார் 5,000 கடற்படை வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வான்குடை வீரர்கள் (Paratroopers) தற்போது மேற்காசியாவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
"அனைத்து ராணுவ விருப்பங்களும் அதிபர் டிரம்பின் வசம் உள்ளன" என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி தெரிவித்துள்ளார். இருப்பினும், கூடுதல் 10,000 வீரர்கள் குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்த அறிவிப்பு முறையாகப் போர் அமைச்சகத்தால் (Department of War) வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் மின் உற்பத்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு, அதாவது ஏப்ரல் 6, 2026 (திங்கள்) இரவு 8 மணி வரை ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானிய அரசின் கோரிக்கையை ஏற்றே இந்த முடிவை எடுத்ததாக அவர் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார். "பேச்சுவார்த்தைகள் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், நல்லபடியாகவும் நடைபெற்று வருகின்றன" என்று டிரம்ப் கூறி வரும் அதே வேளையில், இந்த ராணுவக் குவிப்பு என்பது ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதற்கான ஒரு 'நெருக்கடி உத்தி' (Pressure Tactic) என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
