அமெரிக்க விசா விதிமுறைகளில் அதிரடி மாற்றம்: வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்றப் பயணிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு நிலையான தங்கும் காலத்தை நிர்ணயிக்கும் புதிய விசா விதிமுறைகளை, அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள "கால அளவு நிலை" (duration of status) என்ற முறைக்கு பதிலாக, இனிமேல் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படும்.
உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி, மாணவர்களுக்கான F விசா, பரிமாற்றப் பயணிகளுக்கான J விசா மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான I விசா ஆகியவை இனி கல்வித் திட்டம் அல்லது வேலைவாய்ப்பு காலம் முழுவதும் செல்லுபடியாகாது.
பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பரிமாற்றப் பயணிகள் இனி அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் வரை மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பொதுவாக 240 நாட்கள் வரை தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனினும், சீனாவைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு இந்த விசா காலம் 90 நாட்களாகக் குறைக்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட காலத்துக்கு மேல் அமெரிக்காவில் நீடிக்க விரும்பும் விசா வைத்திருப்பவர்கள், உள்நாட்டு பாதுகாப்புத் துறையிடம் கால நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் அனுமதி பெற வேண்டும்.
அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், அவர்களைக் கண்காணிப்பதை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதிகள் ஃபெடரல் பதிவேட்டில் (Federal Register) வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும். இது 2025 ஜனவரியில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடுமையான குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாகும்.