இலங்கைக்கு தொடர்ச்சியாக வரும் எரிபொருள் கப்பல்கள் – ஏப்ரல் இறுதி வரை போதுமான கையிருப்பு உறுதி
எரிபொருள் கையிருப்பு குறித்து அதிகாரிகள் வழங்கிய முக்கிய தகவல்
இலங்கைக்கு இந்த மாதத்திற்குள் வரவுள்ளதாக முன்பே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு கிடைக்கும் என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரத்தில் எரிபொருள் விநியோகத்தில் எந்தவித தடையும் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே, தற்போது கொழும்பு துறைமுகத்தில் மசகு எண்ணெய் கொண்ட கப்பல் ஒன்று தரையிறக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். அந்த கப்பலில் உள்ள மசகு எண்ணெய் மூலம் சுமார் 18 நாட்களுக்கு தேவையான எரிபொருள் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மார்ச் மாதத்தில் வரவுள்ள எரிபொருள் கப்பல்கள்
இதைத் தொடர்ந்து மார்ச் மாதத்திற்குள் மேலும் பல கப்பல்கள் இலங்கையை அடையவுள்ளன. மார்ச் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் 19,000 மெட்ரிக் தொன் டீசலும் 21,000 மெட்ரிக் தொன் பெட்ரோலும் கொண்ட கப்பல்கள் வரவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சிங்கப்பூரில் இருந்து தலா 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோல் கொண்ட மற்றொரு கப்பலும் இலங்கையை அடையவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மார்ச் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் இந்தியாவில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோல் கொண்ட கப்பல் ஒன்று வரவுள்ளது. மார்ச் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இந்தியாவில் இருந்து 35,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் கொண்ட கப்பல் வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து கூடுதல் டீசல் விநியோகம்
மார்ச் மாத இறுதியில் மேலும் ஒரு முக்கிய கப்பல் இலங்கையை அடைய உள்ளது. மார்ச் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் சிங்கப்பூரில் இருந்து 37,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட கப்பல் வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இந்த மாதத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் கப்பல்களும் இலங்கைக்கு வருவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில ஏற்கனவே இலங்கையை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த கப்பல்கள் மூலம் கிடைக்கும் எரிபொருள் கையிருப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரம் வரை நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமானதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.