புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு ஒன்றை வழங்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

டிசம்பர் 31, 2024 - 20:15
புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வெளியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வல்லுனர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில், பொருத்தமான பரிந்துரையை தேர்வு செய்து, உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு, இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களான ஐ.ஜி.எஸ். பிரேமதிலக மூன்று மில்லியன் ரூபாவையும், சமிந்த குமார இளங்கசிங்க இரண்டு மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்திற்கு இழப்பீடாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தாக்கல் செய்த நான்கு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் மூன்று கேள்விகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதன் காரணமாக, அந்த மூன்று பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இலவச மதிப்பெண்கள் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தால் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

அத்தோடு, தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு ஒன்றை வழங்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!