மண்சரிவில் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்
2023ஆம் ஆண்டு மண்சரிவில் வீடுகளை இழந்த பூனாகலை, கபரகலை பகுதிகளைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு “நவோதயாபுரம்” புதிய வீடுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்று (28) கையளிக்கப்பட்டன.
ஒவ்வொரு வீடும் 10 பேர்சஸ் காணியில் 550 சதுர அடி பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி சுமார் 32 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4000 இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் 163 பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டன.
மலையக மக்களுக்கு வீடு, காணி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்துடன், எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்திலும் வீட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும், மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்காக பல்வேறு நிறுவனங்களின் அதிகாரங்களை ஒருங்கிணைத்து “மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை” ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்தார்.





