அழகு நிலையத்தை நடத்திய தம்பதி கைது – ரூ.7 கோடி போதைப்பொருள், பணம் என சிக்கிய ஆதாரங்கள்!
மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் தம்பதி ஒன்று, நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த அழகு நிலையத்தை முற்றுகையிட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாத்தறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்தன விஜேசேகரவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த ஜயமினி குமாரவின் மேற்பார்வையில், இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மாத்தறை வெலேகொட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபரிடமிருந்து 2 கிலோகிராம் 45 கிராம் ஹெரோயின் மற்றும் 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், அவரது 26 வயதுடைய மனைவியிடமிருந்து 6 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு மின்னணு தராசுகள் மற்றும் நான்கு கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒரு கிராம் ஹெரோய்ன் சுமார் 25,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட தம்பதியினர் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (28) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.