மட்டக்குதிரை மீது தாக்குதல் – சமூக ஊடகங்களில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இளைஞன் கைது
நுவரெலியாவில் மட்டக்குதிரை (Pony) ஒன்றைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மட்டக்குதிரை தாக்கப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இளைஞனை கைது செய்துள்ளனர்.
விலங்குகளுக்கு கொடுமை செய்வதைத் தடுக்கும் 1907ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க விலங்குகள் மீதான கொடுமைத் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழும், தண்டனைச் சட்டக்கோவையின் 411 மற்றும் 412ஆவது பிரிவுகளின் கீழும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (28) முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
