பெரிய கல்வி மாற்றங்களை அமல்படுத்த அரசு தயாராக உள்ளது – சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி
சுதந்திர தின வாழ்த்து செய்தியிலும், வளமான நாடும் உயர்ந்த வாழ்க்கை தரமும் கொண்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்தி பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை உருவாக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதனை முன்னிட்டு, கல்வித் துறையை மேம்படுத்தும் வகையில் விரிவான கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று (04) காலை நடைபெற்ற 78ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். “இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
சுதந்திர தின வாழ்த்து செய்தியிலும், வளமான நாடும் உயர்ந்த வாழ்க்கை தரமும் கொண்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். பல சவால்களை கடந்து பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ள தற்போதைய காலகட்டத்தில், நாடு முன்னேற்றப் பாதையில் பயணித்து வருவது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இலங்கையர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டதன் மூலம் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடிந்துள்ளது. மேலும், தூய்மையான அரசியல் பண்பாட்டை உருவாக்கும் முயற்சிகளின் மூலம் உலக அரங்கில் இலங்கையின் மரியாதை உயர்ந்துள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.
நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார வளர்ச்சி அனைத்து இனங்களுக்கும், அனைத்து பிரதேச மக்களுக்கும் சமமாக சென்றடைவதை உறுதி செய்வதே அரசின் அடுத்த முக்கிய இலக்காகும் என அவர் தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட பெரிய இயற்கை அனர்த்தத்திற்குப் பின்னரும், நாட்டின் உறுதியான அடித்தளமும் மக்களின் ஒத்துழைப்பும் காரணமாக மீட்பு பணிகள் வெற்றிகரமாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் கிடைத்த பல வாய்ப்புகளை நாடு முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் போனதாக நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இனி அந்த தவறுகளை மீண்டும் செய்யாமல், முன்னேறிய மற்றும் மரியாதைக்குரிய நாட்டை உருவாக்க உறுதியுடன் செயல்படுவோம் என்றார். இலங்கையின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் வரலாற்று மரபுகளை பாதுகாத்து கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் மக்களின் ஒற்றுமை, உறுதி மற்றும் நம்பிக்கையின் மூலம் வளமான நாடையும் சிறந்த வாழ்க்கை முறையையும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய ஜனாதிபதி, சுதந்திரத்தின் உண்மையான நோக்கங்களை அடைய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.