பெந்தோட்ட கடலில் வான் சாகச விபத்தில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!
பெந்தோட்ட கடற்பரப்பில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற பாராமோட்டர் (மோட்டார் பொருத்தப்பட்ட பாராகிளைடர்) விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து, இன்று புதன்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில் பெந்தோட்ட கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 31 வயதுடைய பாலஸ்தீனப் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலாப் பயணிகளுக்காக பொழுதுபோக்கு வான்வழி சாகசச் சவாரிகளை நடத்தி வந்த தனியார் நிறுவனம் ஒன்றின் பாராமோட்டர் இயந்திரக் கோளாறு காரணமாக பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கடலில் விழுந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து நேரத்தில் பாராமோட்டரில் விமானியைத் தவிர, மேற்படி பெண் சுற்றுலாப் பயணியும் பயணித்துக் கொண்டிருந்தார்.
விபத்தில் விமானி உயிர் தப்பிய நிலையில், கடலில் விழுந்த பெண் சுற்றுலாப் பயணி முதலில் காணாமல் போயிருந்தார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவரது சடலம் பெந்தோட்ட கடற்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
பாராமோட்டரை இயக்கிய கொலம்பிய நாட்டைச் சேர்ந்த விமானி உயிர் தப்பியுள்ளார் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம், நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.