தாயை தாக்கிய அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பி கைது
அங்குருவாதொட்ட, பெதிகமுவகந்த பகுதியில் இன்று சனிக்கிழமை (19) அதிகாலை இடம்பெற்ற கூர்மையான ஆயுதத் தாக்குதலில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹல்தொட பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த நபர், தொடர்ச்சியாக மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்றிரவு உயிரிழந்த நபர், மதுபோதையில் தனது தாயார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதன்போது தாயைக் காப்பாற்றுவதற்காக அங்கு வந்த 35 வயதுடைய தம்பி, மன்னாக் கத்தியால் அண்ணனைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த அண்ணன் உயிரிழந்துள்ளார்.
மகனின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த தாயார், ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். உயிரிழந்த நபர் இதற்கு முன்னரும் தனது தந்தையைத் தாக்கியிருந்ததாகவும், அவரும் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 35 வயதுடைய தம்பியை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.