போதைப்பொருள் பயன்படுத்திய வீடியோ வைரல்: 11 வயது சிறுவன் பொலிஸ் காவலில்!
11 வயதுடைய சிறுவன் ஒருவன், போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அது தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
குறித்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் உடனடி விசாரணைகளை முன்னெடுத்தது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் தர்ஷிகா குமாரியின் ஆலோசனைக்கு அமைவாக, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிமாலி பொன்சேகா மற்றும் பொலிஸ் பரிசோதகர் காண்டீபன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமை (18) கணேமுல்ல, சுமேத மாவத்தையில் உள்ள வீடொன்றில் குறித்த சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டார். பாதுகாப்பற்ற சூழலில் இருந்த அச்சிறுவனைப் பொலிஸார் உடனடியாகத் தமது பாதுகாப்புக் காவலில் எடுத்தனர்.
பின்னர் அச்சிறுவன் அவனது தாயாருடன் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு அழைத்து வரப்பட்டான். சிறுவனின் நல்வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்குத் தேவையான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.