5 வீடுகள் சுற்றிவளைப்பு - தேடியும் கிடைக்காத தேசபந்து
இந்த சுற்றிவளைப்பின் போது, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தங்கியிருந்த 5 வீடுகளையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்தும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
கொழும்புக்கு அருகிலுள்ள இரண்டு சொகுசு குடியிருப்பு வளாகங்களில் உள்ள இரண்டு வீடுகளும், கொழும்பு மற்றும் குருநாகல் பகுதிகளிலுள்ள மூன்று வீடுகளும் இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சுற்றிவளைப்பின் போது, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.
மாத்தறை வெலிகம, பெலேன பகுதியிலுள்ள உணவகமொன்றுக்கருகில் கடந்த 2023 ஆம் ஆண்டு, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாகவே முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தேடப்பட்டு வருகின்றார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், கொழும்பு குற்றப்பிரிவின் சார்ஜென்ட் ஒருவர் கொல்லப்பட்டு மற்றொரு அதிகாரி ஒருவரும் காயமடைந்திருந்தார்.
இந்த சம்பவத்தில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், மாத்தறை நீதவான் நீதிமன்றம், தேசபந்து தென்னகோன் வெளிநாடுகளுக்குச் செல்வதை தடுக்கும் வகையிலான பயணத்தடையையும் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.