ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை: காரணம் என்ன தெரியுமா?
நாட்டில் தற்போது நிலவி வரும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை கருத்தில் கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அரச ஊழியர்களுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்ததன் பின்னணியிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில், எரிசக்தி முகாமைத்துவத்தை பேணி நாட்டின் பொருளாதார செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் பொருளாதார செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு தேவையான அவசர நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் கலந்து கொண்ட இந்த கலந்துரையாடலில் தற்போதைய சூழ்நிலையில் அரச சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களை எதிர்கொள்வதற்காக நாளை (17) முதல் மறு அறிவித்தல் வரும் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறைக்கும் பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சுகாதாரம், துறைமுகம், நீர் வழங்கல் மற்றும் சுங்கம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த விடுமுறை நடைமுறை பொருந்தாது என அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் தற்போதைய நிலையை ஆராய்ந்து எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமைச்சரவையினால் நான்கு பிரதான குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.