சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் உயிரை காப்பாற்றுமாறு அவசர கோரிக்கை
சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகம் தொடர்பில் அவதூறான மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்தைப் பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டில் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தொழிலாளியான சிவராசா அனோஜனுக்கு, அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜன் வழக்கில் முதலில் தீர்ப்பளித்த கீழ் நீதிமன்றம், அவருக்கு ஐந்து வருடக் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால்கள் அபராதமும் விதித்திருந்தது.
இந்தத் தண்டனையைக் குறைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், தண்டனையைக் குறைப்பதற்குப் பதிலாக மரண தண்டனை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், இது தொடர்பில் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
இந்நிலையில், இளைஞன் சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனோஜனின் மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கும், அவருக்குச் சட்ட மற்றும் இராஜதந்திர உதவிகளை வழங்குவதற்கும் சவூதி அதிகாரிகளுடன் அவசர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திடம் தொலைபேசி ஊடாக வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, தனது ‘X’ தளத்தில் விரிவான பதிவொன்றை வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், இந்த விவகாரத்தை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் எழுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வழங்கிய ஆலோசனையின் பேரிலேயே குடும்பத்தினர் இந்த மேன்முறையீட்டை முன்னெடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், தூதரகத்தின் சட்ட மதிப்பீட்டின்படி வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருந்த போதிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் வங்கிக் கணக்கிற்கு சட்டக் கட்டணமாகக் குடும்பத்தினர் 1,890,766 ரூபாயைச் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவு ஆவணங்களின்படி, கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதியன்று கிழக்கு மாகாண மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டத்தரணி அட்லான் அப்துல்லா அல்-சுபை ஊடாக மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும், குடும்பத்தினர் பலமுறை கோரியும் செப்டம்பர் 16 அன்றே அது தொடர்பான ஆவணம் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நீதிமன்றத்தில் வேறொரு சட்டத்தரணியே முன்னிலையானதாகவும், அவருடைய விவரம் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வெளிவிவகார அமைச்சு சரியான சட்டப் பிரதிநிதித்துவத்தையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்தத் தவறிவிட்டதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ள அவர், உடனடியாக அனுபவம் வாய்ந்த சட்டத்தரணிகளை நியமித்து, பொதுமன்னிப்பு உள்ளிட்ட சகல இராஜதந்திர மற்றும் மனிதாபிமான வழிகளையும் பயன்படுத்தி அனோஜனின் உயிரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, 2013ஆம் ஆண்டு குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனோஜனைப் பாதுகாப்பாக மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் என சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான சுவஸ்திகா அருலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
மத நிந்தனைக் குற்றச்சாட்டில் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அந்நாட்டின் கடுமையான சட்டக் கட்டமைப்பிலிருந்து இலங்கைப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கான காத்திரமான ஒப்பந்தங்கள் எவையும் இல்லாத சூழலிலேயே தொழிலாளர்கள் அங்கு அனுப்பப்படுவதாகத் தனது முகநூல் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.