கனமழை தொடரும் நிலையில் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று (26) மாலை 4 மணி முதல் நாளை (27) மாலை 4 மணி வரை இந்த எச்சரிக்கை அமலில் இருக்கும்.
இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை “அம்பர்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குருவிட்ட, இரத்தினபுரி, எஹெலியகொட மற்றும் அயகம பகுதிகளில் மண்சரிவு அபாயம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், முதல் நிலை “மஞ்சள்” எச்சரிக்கையும் பல பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் மாதுகம மற்றும் புலத்சிங்கள பகுதிகளும், கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, தெரணியகல, ருவன்வெல்ல மற்றும் யட்டியந்தோட்டை பகுதிகளும் எச்சரிக்கை பட்டியலில் உள்ளன.
மேலும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பகுதியும், இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல, பெல்மடுல்ல, நிவித்திகல, எலபாத மற்றும் கலவான பகுதிகளும் அவதான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அதிக மழை பெய்யும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், மண் சரிவு, கல் உருண்டு விழுதல் மற்றும் நிலப் பிளவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

