புதையலுக்காக பலிகொடுக்கப்பட்ட தாதி: அலைபேசியால் சிக்கிய நபர்!

இவ்வாறு சடலமாக தோண்டி எடுக்கப்பட்ட பெண் ஹேவாஹட்ட முள்ளோயா தோட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் தர்ஷினி (வயது 36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 22, 2024 - 01:23
புதையலுக்காக பலிகொடுக்கப்பட்ட தாதி: அலைபேசியால் சிக்கிய நபர்!

நுவரெலியா மாவட்டம் மந்தாரநுவர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோனப்பிட்டிய சீனாபிட்டி தோட்ட அடர் வனப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் இன்று (21) மதியம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக மந்தாரநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக தோண்டி எடுக்கப்பட்ட பெண் ஹேவாஹட்ட முள்ளோயா தோட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் தர்ஷினி (வயது 36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சடலமாக தோண்டி எடுக்கப்பட்ட பெண் அக்கரப்பத்தனை மன்றாசி பிரதேச வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த ஆறுமாதம் மேலாக குறித்த தாதி பெண் காணாமற் போயுள்ளதாக அக்கரப்பத்தனை மற்றும் மந்தாரநுவர பொலிஸ் நிலயங்களில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் காணாமற் போன பெண் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தேடுதல்களையும் மேற்கொண்டுள்ளனர்.

அதேநேரத்தில் சம்பவத்தில் காணாமற் போன பெண் பாவித்து வந்த அலைபேசி கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இயங்கியுள்ளது. இதை ஆதாரமாக கொண்டுபொலிஸார் தேடுதல் நடவடிக்கையை துரிதப்படுத்தினர்.  இந்த  சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடத்தில் கை தொலைபேசி இருந்தமையை கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரும்  காணாமற் போயிருந்த பெண்ணுடன் மன்றாசி பிரதேச வைத்தியசாலையில்  பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபரிடம் குறித்த பெண் பாவித்து வந்திருந்த அலைபேசியை ஆதாரமாக வைத்து பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் இப் பெண்னை கொலை செய்து புதைக்கப்பட்ட தகவல் கிடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரம், சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் கோனப்பிட்டிய சீனாபிட்டி கீனாகலை தோட்ட அடர் வனத்தில் புதையல் தோண்ட இப்பெண்னை கடத்தி வந்து பலி கொடுக்க கொலை செய்து புதைத்ததாக  விசாரணையில் தகவல் வெளியாகியது.

இந்த தகவலின் அடிப்படையில் மந்தாரநுவர பொலிஸார் வலப்பனை பிரதேச நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை தொடந்து புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டியெடுக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பின் (21) இன்று புதன்கிழமை காலை சம்பவ இடத்திற்கு வருகைதந்த நீதவான் முன்லையில் புதை குழி தோண்டப்பட்டு பெண்ணின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சடலத்தை அடையாளம் கண்டு மரண விசாரணை நடத்தப்பட்ட பின் சடலம் சட்ட வைத்தியரின் உடல் கூற்று பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை பொலிஸ் பாதுகாப்பில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து நீதி மன்றத்தில் விசாரணை அறிக்கையுடன் ஆஜர் படுத்தவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடல் கூற்று பரிசோதணை (22) வியாழக்கிழமை நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!