நாடாளுமன்ற 3ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு ஆரம்பம்

102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் திகதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் திகதியும் நடைபெற்றது.

மே 7, 2024 - 11:01
நாடாளுமன்ற 3ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு ஆரம்பம்

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் திகதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் திகதியும் நடைபெற்றது.

இந்நிலையில், 93 தொகுதிகளுக்கு இன்று 3ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 3-வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. குஜராத் (25 தொகுதிகள்), கர்நாடகா (14), மராட்டியம் (11), உத்தரபிரதேசம் (10), மத்திய பிரதேசம் (9), சத்தீஷ்கார் (7), பீகார் (5), அசாம் (4), மேற்கு வங்காளம் (4), கோவா (2), தத்ரா-ஹவேலி-டையூ-டாமன் (2) என 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது.

குஜராத்தில் 25 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடகாவில் ஏற்கனவே 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ள நிலையில், இன்று எஞ்சிய 14 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

குஜராத்தின் சூரத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேவேளை 2-வது கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற இருந்த மத்திய பிரதேசத்தின் பெதுல் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியின் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இன்று நடைபெற்று வரும் 3ம் கட்ட தேர்தலில் பெதுல் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

3ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் வரும் 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் திகதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் திகதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!