“இலங்கைக்கு எப்போதும் உதவ தயாராக உள்ளோம்”: ஈரான் தூதரின் முக்கிய அறிவிப்பு
இலங்கை–ஈரான் உறவுகள் குறித்து முக்கியமான அறிவிப்பை ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான ஈரானிய தூதர் அலிரெஸா டெல்கோஷ், இலங்கை எமது நெருங்கிய நட்பு நாடாகும் என்றும், எந்த நேரத்திலும் தேவையான உதவிகளை வழங்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறித்து இலங்கை கோரிக்கை விடுத்தால், அவற்றை வழங்க ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற சூழ்நிலையிலும், நட்பு நாடுகளுக்கான விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படுத்தப்படவில்லை என்றும், குறிப்பாக ஹார்முஸ் நீரிணை தொடர்பாக எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
போர் சூழ்நிலையால் இலங்கை பாதிக்கப்பட வேண்டாம் என்பதே ஈரானின் நிலைப்பாடு என்றும், இலங்கை மீது ஈரான் கொண்டுள்ள மரியாதை மிக உயர்ந்தது என்றும் தூதர் தெரிவித்தார். இதற்கிடையில், சமீபத்தில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய போர்க்கப்பலின் குழுவினரை மீட்க இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்தார். அந்த உதவியை ஈரான் மறக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையில் இருந்து, ஈரானில் வசிக்கும் இலங்கையர்கள் தாய்நாட்டிற்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க ஈரானிய அரசு தயாராக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
