முகமூடி அணிந்த இருவர் சொகுசு பஸ்ஸுக்கு தீ வைப்பு - நூலிழையில் உயிர் தப்பிய சாரதி, நடத்துநர்!
கடுவெல பிரதான பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பஸ் ஒன்று, இன்று புதன்கிழமை (05) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.
கடுவெல - மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை மார்க்கத்தில் இயங்கும் இந்த பஸ், அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவர், பஸ்ஸை நோக்கி நடந்து சென்று, அதற்குத் தீ வைத்த பின்னர், நிதானமாக அங்கிருந்து நடந்து செல்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
தரமற்ற தலைக்கவசங்களை விற்பனை செய்த கடை மற்றும் விநியோகஸ்தருக்கு ரூ.10,000 அபராதம்
தீ சம்பவத்தின் போது, பஸ்ஸின் சாரதியும் நடத்துநரும் அதன் உள்ளேயே உறங்கிக் கொண்டிருந்தனர். அருகிலிருந்த மற்றொரு பஸ்ஸின் ஊழியர்கள், தீ வைப்பவர்களைக் கண்டு எச்சரித்ததால், அவர்கள் இருவரும் எவ்விதக் காயங்களுமின்றி உயிர் தப்பினர்.
இருப்பினும், இந்தத் தீயினால் குறித்த சொகுசு பஸ் முழுமையாக எரிந்து நாசமானது. அத்துடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவெல - கொள்ளுப்பிட்டி மார்க்கத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பஸ்களும் சிறிய அளவில் சேதமடைந்துள்ளன.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சொகுசு பஸ்ஸுக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து கடுவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
