ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்க உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரது சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று (22) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமக்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார்.
அதன்படி, குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி பிரேமச்சந்திரவின் சட்டத்தரணிகளும் கொழும்பு மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பத்தை தாக்கல் செய்தனர்.
2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை டிஃபென்டர் மூலம் கடத்திச் சென்றமை மற்றும் தவறான முறையில் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஹிருணிகாவுக்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதன்படி, பிரேமச்சந்திர 18 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதோடு, 1000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அபராதத் தொகையை செலுத்த தவறினால் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் கூடுதலாக 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.