முதல் சம்பவம்: ரூ.37.7 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் 23 வயது வெளிநாட்டு மாணவன் கைது 

இவ்வளவு பெரிய பெறுமதியுடைய ஹசீஸ் போதைப்பொருள் தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட முதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
முதல் சம்பவம்: ரூ.37.7 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் 23 வயது வெளிநாட்டு மாணவன் கைது 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முப்பத்தேழு கோடியே எழுபது இலட்சம் ரூபாய் பெறுமதியான பெருமளவு "ஹசீஸ்" (Hashish) போதைப்பொருள் தொகையுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் விசேட பயணிகளுக்காக கட்டண அடிப்படையில் வழங்கப்படும் "கோல்ட் ரூட்" (Gold Route) பயணிகள் முனையத்தின் ஊடாக நாட்டிற்குள் நுழைய முயன்றபோதே, குறித்த நபர் நேற்று (19) நள்ளிரவு சுங்க அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையில் சிக்கியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கைது செய்யப்பட்டுள்ள நபர், டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 23 வயது பல்கலைக்கழக மாணவன் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் கனடாவிலிருந்து டுபாய் ஊடாக, எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-648 விமானத்தின் மூலம் நேற்று இரவு 11.15 மணியளவில் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

சோதனைகளின் போது, அவர் கொண்டு வந்திருந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் 37 கிலோகிராம் 639 கிராம் எடையுடைய ஹசீஸ் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் 146 தனித்தனி பாக்கெட்டுகளாக அடைக்கப்பட்டு சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இவ்வளவு பெரிய பெறுமதியுடைய ஹசீஸ் போதைப்பொருள் தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட முதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். அத்துடன், சுமார் 206 அமெரிக்க டொலர் செலுத்தி "கோல்ட் ரூட்" விசேட பயணிகள் வசதியை பயன்படுத்தி நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்த முயற்சித்த முதல் சம்பவமும் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -