தேச முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டிய தருணம் – பிரதமர் 

தேசிய இலக்குகளை அடைவதற்காக குறுகிய அரசியல் நோக்கங்களை ஒதுக்கி வைத்து, நாட்டின் மொத்த முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 4, 2026 - 09:41
தேச முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டிய தருணம் – பிரதமர் 

விழுமியங்களால் நிரம்பிய இலங்கைத் தேசத்தை உருவாக்குவதற்காக தனிநபர் மட்டத்திலும், ஒட்டுமொத்த சமூக மட்டத்திலும் அனைவரும் தாய்நாட்டிற்காக தங்களது பங்களிப்பை வழங்க வேண்டிய அவசியமான காலம் வந்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார். புதிய சுதந்திரத்தை நோக்கிய எதிர்பார்ப்புடன் இந்த ஆண்டின் தேசிய சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடுவதாகவும், மக்கள் ஆதரவுடன் உருவான அரசாங்கம் தற்போது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதநேய பண்புகள், திறமை மற்றும் புத்திசாலித்தனம் கொண்ட எதிர்கால தலைமுறைக்காக நாட்டை மேம்படுத்தும் பணிகள் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதற்காக ஒவ்வொரு குடிமகனும் தனிப்பட்ட முறையிலும், கூட்டு முயற்சிகளின் மூலமும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார்.

நாட்டை வலுவான பொருளாதார அடித்தளத்தில் நிலைநிறுத்துதல், புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்குதல், இனவாதம் மற்றும் மதவாதம் இல்லாத சமத்துவமான சமூகத்தை கட்டியெழுப்புதல் மற்றும் கிராமப்புற வறுமையை ஒழித்தல் ஆகியவை அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளாக உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிப்புக்குள்ளாகிய அல்லது பாதிப்புக்குள்ளாகக்கூடிய குடிமக்கள் புறக்கணிக்கப்படாத வகையில் சமூக பாதுகாப்பு திட்டங்களை உருவாக்குதல், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் உலக நாடுகளுடன் நம்பகமான வெளியுறவுக் கொள்கையை முன்னெடுத்து இலங்கையை சர்வதேச அரங்கில் மீண்டும் வலுப்படுத்துதல் ஆகியவற்றிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய இலக்குகளை அடைவதற்காக குறுகிய அரசியல் நோக்கங்களை ஒதுக்கி வைத்து, நாட்டின் மொத்த முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், மறுமலர்ச்சி காலத்தை நோக்கிய இந்த கூட்டு பயணத்தில் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அனைவரும் இணைந்திட வேண்டும் என 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை மக்களிடம் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!