'வாக்குகளுக்காக கம்பனிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட முடியாது'
கல்வி புரட்சிமூலமே மலையகத்தில் நிலையானதொரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நாம் உறுதியாக நம்புகின்றோம். அதனால்தான் கல்வி அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கிவருகின்றோம்.

“இது தேர்தல் காலம் என்பதால், வாக்குகளைப் பெறுவதற்காக கம்பனிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட முடியாது. அவ்வாறு செய்தால் அது தொழிலாளர்களுக்கே பாதிப்பாக அமையும்” என, இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து, பொகவந்தலாவ பகுதியில் நேற்று (04) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தேர்தலுக்காக எமது மக்களை பணயம் வைப்பதற்கு நாம் தயாரில்லை. வழங்கிய வாக்குறுதிபோல நிச்சயம் 1,700 ரூபாயை பெற்றுக்கொடுப்போம். சிலருக்கு அரசியல் நடத்துவதற்கு வேறெதுவும் இல்லை. அதனால்தான் 1,700 ரூபாயை வைத்து அரசியல் நடத்துகின்றனர்.
“கல்வி புரட்சிமூலமே மலையகத்தில் நிலையானதொரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நாம் உறுதியாக நம்புகின்றோம். அதனால்தான் கல்வி அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கிவருகின்றோம்.
“அமைச்சர் ஜீவன் தொண்டமானும் அதிகளவான நிதி ஒதுக்கீடுகளை கல்விக்காக செய்துவருகின்றார். அதனால்தான் இன்று எல்லா துறைகளிலும் எமது சமூகத்தினர் பிரகாசித்துவருகின்றனர்.
“பெருந்தோட்டப் பகுதிகளுக்கு சமுர்த்தி வழங்கப்படவில்லை. ஆனால், அஸ்வெசும வந்தபோது எமது மக்களும் உள்வாங்கப்பட வேண்டும் என எமது அமைச்சர் திட்டவட்டமாக எடுத்துரைத்தார். இதனையடுத்து எமது மக்களும் உள்வாங்கப்பட்டனர்.
“அதுமட்டுமல்ல காணி உரிமை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் இடம்பெறுகின்றன. தோட்டங்களை கிராமங்களாக்குவதற்குரிய அமைச்சரவைப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
“மலையகத்துக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளார். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிவருகின்றார். எனவேதான், மக்கள் பக்கம் நின்று நாம் அவரை ஆதரிக்கின்றோம்.
“அதுமட்டுமல்ல நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களையே அவர் உறுதிமொழியாக வழங்கிவருகின்றார். ஆனால், சில வேட்பாளர்கள் வாக்குகளைப் பெறுவதற்காக முடியாதவிடயங்களையெல்லாம் கூறுகின்றனர். ஏனெனில், தேர்தலின் பின்னர் அவர்கள் காணாமல்போய்விடுவார்கள்.
“தேர்தலில் வாக்குவேட்டை நடத்துவதற்காக பெருந்தோட்ட நிறுவனங்களின் நிபந்தனைகளை ஏற்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு நாம் தயாரில்லை. தொழிலாளர்களின் நலனே எமக்கு முக்கியம்” என்றார்.
(க.கிஷாந்தன்)