தரமற்ற தலைக்கவசங்களை விற்பனை செய்த கடை மற்றும் விநியோகஸ்தருக்கு ரூ.10,000 அபராதம்
கட்டாய SLS 517 தரச் சான்றிதழ் இன்றி பாதுகாப்பு தலைக்கவசங்களை விற்பனை செய்த மற்றும் விநியோகித்த குற்றத்துக்காக, வெலிவேரியாவில் உள்ள ஒரு விற்பனை நிலையம் மற்றும் மாகொலவில் உள்ள ஒரு விநியோகஸ்தருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
கம்பஹா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை புலனாய்வு அதிகாரிகளால் கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, தர நிர்ணயத்துக்கு முரணான 42 தலைக்கவசங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கு, மஹர நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 59ஆவது கட்டளையின் கீழ் விதிமுறைகளை மீறியதாக இரு பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் தலா 5,000 ரூபாய் வீதம் மொத்தம் 10,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், கைப்பற்றப்பட்ட தலைக்கவசங்களை உடனடியாக அழிக்குமாறு உத்தரவிட்டது.
SLS சான்றிதழ் இல்லாத தலைக்கவசங்களை விற்பனை செய்யும் அல்லது விநியோகிக்கும் வர்த்தகர்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், இது தொடர்பான முறைப்பாகளை 1977 என்ற இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறும், நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.