2026 இல் பாடசாலை நேரம் நீடிக்காது: கல்வி அமைச்சு அறிவிப்பு
தரம் 1 மாணவர்களை அறிமுகப்படுத்தும் செயற்பாடு ஜனவரி 5ஆம் திகதி தொடங்கவுள்ளதுடன், அவர்களுக்கான உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகள் 2026 ஜனவரி 29ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளன.
பாடசாலைகள் மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகள் வழமைக்குத் திரும்பும் வரை, 2026ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்க வேண்டாமென கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2026ஆம் ஆண்டில் 5 முதல் 13 வரை உள்ள தரங்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை மாற்றமின்றி தொடரும். அரச, அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் 2026ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்காக ஜனவரி 5ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
மேலும், தரம் 6 முதல் தரம் 13 வரை ஒரு நாளில் ஏழு பாடவேளைகள் நடத்தப்படும் என்றும், ஒவ்வொரு பாடவேளைக்கும் 45 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடு தரம் 1 மற்றும் தரம் 6 இல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன் கீழ், தரம் 6 இற்கான கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக 2026 ஜனவரி 21ஆம் திகதி ஆரம்பமாகும். தரம் 1 மாணவர்களை அறிமுகப்படுத்தும் செயற்பாடு ஜனவரி 5ஆம் திகதி தொடங்கவுள்ளதுடன், அவர்களுக்கான உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகள் 2026 ஜனவரி 29ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளன.
தரம் 1 மாணவர்களுக்கான செயற்பாட்டு புத்தகங்களும், தரம் 6 மாணவர்களுக்கான கற்றல் தொகுதிகளும் அந்தந்த தரங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் முன்னரே வழங்கி முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. ஏனைய தரங்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி 2026 ஜனவரி 12 முதல் 20ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாகவும், இது தொடர்பான விரிவான சுற்றுநிருபம் 2026 ஜனவரி 2ஆம் திகதி வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

