கண்டி, நுவரெலியா பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன
சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) வழமைபோல் மீண்டும் திறக்கப்படும் என மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து பெய்து வந்த கனமழை மற்றும் சீரற்ற வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை (04) ஒரு நாள் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
மாணவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் கல்விப் பணிப்பாளர்கள் முன்னதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், வானிலை நிலைமையை மீளாய்வு செய்ததன் பின்னர், நாளை புதன்கிழமை (05) முதல் இரண்டு மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் வழக்கம்போல் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என மத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர், வழமைபோல் கல்வி நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.