வீதிப் புனரமைப்பு பணிகளில் அலட்சியம்: குழியில் விழுந்து கணவன் படுகாயம் - நீதிக்காகப் போராடும் மனைவி!
வீதிப் புனரமைப்புப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட குழியைச் சுற்றி முறையான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாததால், அதில் விழுந்து தனது கணவன் படுகாயமடைந்ததாகக் கூறி, பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட தம்பதியினர் இரவு நேரத்தில் அந்தப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வீதில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்து விபத்துக்குள்ளாகினர். இந்த விபத்தில் அந்தப் பெண்ணின் கணவருக்குப் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.
விபத்து நடந்த சமயம் அங்கு எந்தவோர் எச்சரிக்கை பலகையோ அல்லது பாதுகாப்பு வேலிகளோ வைக்கப்பட்டிருக்கவில்லை என்று அந்தப் பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், விபத்து நடந்த மறுநாள் காலையில் அந்தப் பெண் சம்பவ இடத்தில் போராட்டம் நடத்தியபோது, விபத்துக்குப் பின்னரே பணியாளர்கள் அங்கு அவசர அவசரமாகப் பாதுகாப்பு வேலிகளை அமைத்ததாகவும் அவர் சாடினார்.
மூன்று குழந்தைகளின் தாயான அந்தப் பெண், தனது கணவரைக் காப்பாற்றவும் தங்களுக்கு நீதி வழங்கவும் அதிகாரிகளிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த இடத்தில் ஒரேயொரு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தாலும் கூட, இந்த விபத்தைத் தடுத்திருக்க முடியும் என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.