குருவிட்ட சிறைச்சாலையில் அமைதியின்மை: இருவர் பலி, நான்கு பேர் காயம்
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள குருவிட்ட சிறைச்சாலையில் (Kuruwita Prison) நிலவிய அமைதியின்மை இன்று காலை (07) மீண்டும் தலைதூக்கியது. இதில் இரண்டு சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலை வளாகத்திற்குள் நேற்றிரவு (ஆகஸ்ட் 06) முதன்முதலில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதுடன், ஆரம்பத்தில் அந்த நிலைமையை சிறை அதிகாரிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும், ஆனால் இன்று காலை (ஆகஸ்ட் 07) மீண்டும் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டதால் நிலைமை கைமீறிச் சென்றதாகவும் சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பதற்றமான சூழ்நிலையை அடக்கும் பொருட்டு சிறை அதிகாரிகள் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி நடவடிக்கை எடுத்தனர். மேலும், கலவரத்தில் ஈடுபட்ட சில கைதிகள், அங்குள்ள சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்துள்ளனர்.
இதனால், சேதமடைந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.