இலங்கை வந்தடைந்தார் பிரதமர் மோடி - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையை வந்தடைந்தார்.
இந்தியப் பிரதமர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டுக்கு வந்துள்ளார்.
இந்தியாவுக்கு சொந்தமான இந்தியா 01 என்ற விசேட விமானத்தில் இலங்கை வந்த இந்தியப் பிரதமருடன் 60 இந்தியக் குழுவினர் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர்.
அவர்களில், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரும் உள்ளார்.
தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்திய பிரதமர் உள்ளிட்ட குழுவினரை வரவேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் அறைக்கு வருகை தந்திருந்தார்.
இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால், கேபினில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
