இணைய மோசடி வழக்கு: 74 வியட்நாமியர்கள் மீண்டும் விளக்கமறியலில்
இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 74 வியட்நாம் நாட்டினரை மே 21 ஆம் தேதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (15) கோட்டை நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொள்ளுப்பிட்டி பொலிஸார் தரப்பில் பல முக்கிய தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இதற்கு முன்னர் கம்போடியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் என்றும், அங்கு இடம்பெற்ற இதேபோன்ற இணைய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் அவர்கள் விசா விதிமுறைகளையும் மீறியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் குழுவினருக்கு சம்பளம் வழங்க உதவியதாக கூறப்படும் உள்ளூர் பெண் ஒருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக புலனாய்வாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். தனது கணக்கிற்கு பணம் அனுப்பிய நபரின் அடையாளம் தனக்குத் தெரியாது என அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களை பரிசீலித்த நீதவான், அனைத்து சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
