காயமடைந்த வீரர்களை இராணுவத் தளபதி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்
காயமடைந்த பராசூட் வீரர்களின் நலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக இராணுவத் தளபதி , கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு விஜயம் செய்தார்.

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற 76ஆவது சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையின் போது நேற்று(30) காயமடைந்த பராசூட் வீரர்களின் நலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு நேற்று (30) விஜயம் செய்தார்.
இதன் போது ஏற்பட்ட காயங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த இராணுவத் தளபதி, அதிகாரி மற்றும் சிப்பாயிடம் தனித்தனியாகப் பேசி, தனது வருத்ததினை வெளிப்படுத்தி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விசாரித்தார்.
அத்துடன், இராணுவத் தளபதி வைத்தியர்களை சந்தித்து காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர்கள் விரைவாக குணமடைய உறுதி வழங்கினார்.
அத்துடன், இராணுவத் தளபதி, மருத்துவ ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டினை பாராட்டியதுடன், காயமடைந்த படையினருக்கு சிறந்த சிகிச்சைகளை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.